புத்தம்

நமது பாரம்பரியம் என்ற சொல்லாடல் இரண்டு வகையான அரசியலை நமக்குள் விதைக்கிறது. ஒன்று சாதியத்தால் சிக்கிக்கிடக்கும் நமது பொய்மையான கலாச்சார வரலாறு. இன்னொன்று சாதியத்தால் சிக்கி, தனது உண்மையான வரலாற்றை ஆங்காங்கே பதிவு செய்து கொண்டிருக்கும் உண்மையான இந்திய கலாச்சார வரலாறு. அத்தகைய உண்மையான இந்திய கலாச்சார வரலாற்றின் மிகப்பெரும் உன்னதம் இந்தியாவினை தாயகமாக கொண்டு பிறந்து இன்று உலகத்தின் முக்கிய நாடுகளில் பதிந்துக் கிடக்கும் புத்த சமயமே அது, ஒரு நிமிடம், புத்த தத்துவத்தை மதம் என அழைப்பது சரியா? கண்டிப்பாக கிடையாது. இது ஒரு மதமே அல்ல. புத்தர் கடவுளும் அல்ல. இதனை அவரே தனது சீடர்களிடம் பல சமயங்களில் பகிர்ந்துள்ளார்.

அப்படியிருக்கையில் புத்த இயக்கத்தை ஏன் இன்று மதம் என்று அழைக்க வேண்டும். அதற்கு இருக்கும் காரணம் எப்பொழுது ஒரு தத்துவம், அமைப்பாக மாறுகிறதோ, அப்பொழுதே அது ஒரு நிலையான அரசியலுக்குள் சிக்கிக் கொண்டு அதில் ஒரு அதிகார உணர்வு நுழைந்து விடுகிறது, இதனையே ஆதிக்க சக்திகளாக இருக்கும் சாதிய, ஹிந்துத்துவ அமைப்புகளும் விரும்புகின்றன. உலகின் மிகப்பெரும் சீர்திருத்தவாதியான புத்தர் கடவுளாக மாறியது இப்படித்தான். இதனை மாற்றியமைக்க வேண்டிய ஒரு முக்கியத்துவமிக்க இடத்தில் நாம் இன்று இருக்கிறோம். காரணம், பெரியார் தனது பகுத்தறிவு வாதத்தினால் வளர்த்த சாதியத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரும் சக்தி இன்று தனது அடையாளத்தை இழந்து, அதுவே சாதியை வளர்க்கும் ஒரு அமைப்பாக வலுப்பெற்றுள்ளது. இந்த இடத்தில் புத்த இயக்கம் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. இதனால்தான் புத்த இயக்கம் எப்பொழுதும் திரும்பவும் ஒரு முக்கிய இடத்திற்கு வரக்கூடாது என்பதில் அனைத்து மதங்களும் தங்களது வலுவானக் கரங்களை இணைத்துள்ளன.

புத்தத்தின் வரலாறு முழுவதும், நமது பாடநூல்களிலேயே தவறாகவே போதிக்கப்படுவது இதற்கு ஒரு சரியான உதாரணம். புத்தர் ஆசைகளை வெறுக்க சொல்லியிருப்பதாகவும், அவர் வாழ்வின் மூன்று முக்கிய கொடிய சம்பவங்களான பிணி, முதுமை, இறப்பு ஆகியவை ஆசையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் என கூறியதாகவும் இன்றைய பாடப்புத்தகங்கள் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பதுபோல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இதில் ஒரு நுட்பமான விஷயம் என்னவெனில் மேற்சொன்ன மூன்று விஷயங்களும், ஆசையினால் விளைவது அல்ல. மாறாக மனித வாழ்வின் தவிர்க்க முடியாத விஷயங்கள். அப்படியிருக்க , இதனை எப்படி ஆசையுடன் புத்தர் ஒப்பிட்டிருக்க முடியும்.

உண்மையில் புத்தர் தனது நாட்டிற்கும் அயல் நாட்டிற்கும் இடையே நடைபெற இருந்த தண்ணீருக்கான போரினை தவிர்ப்பதற்கு முயன்றார். அதற்காக இவர் போர்க்களத்துக்கு செல்ல மறுத்து தனது தந்தையிடம் சண்டையிட்டார். இறுதி முடிவாக சண்டையிட வேண்டும் அல்லது , நாட்டினை விட்டு வெளியேற வேண்டும் என்னும் காரணத்தினால் புத்தர் அமைதியினைத் தேடி நாட்டினை விட்டு வெளியேறுகிறார். இதுவே உண்மையான வரலாறு, இதனை மறுத்து பொய்யான வரலாறு இங்கு கற்பிக்கப்பட்டு அதன் வாயிலாகவும் புத்தம் இங்கு அழிக்கப்படுகிறது. மேலும் ஒரு மிகப்பெரும் பொக்கிஷமான புத்த தத்துவம், மாணவர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கப்படாமல், வெறும் சில பகுதிகள் மட்டுமே மாணவர்களிடம் சென்று சேர்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம், இதனை எப்படி செய்யப்போகிறோம் என்னும் குழப்பத்தை தவிர்த்து புத்தம் குறித்த விரிவான வாதங்களை நாம் இன்று அனைத்து இடங்களிலும் துவக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதனை நாம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

– பாலா ரா கணேஷ்
viscomganesh@gmail.com

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)