எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மதுரையை சேர்ந்தவர். தமிழ்ச்சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறசூழல், உலகமயம், மனித உரிமைகள் எனப் பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், இயங்கியும் வருகிறார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை முதலாவதாக தமிழில் தந்தவர்.
மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் 1973ல் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதரபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986ல் மதுரைக்கு பயணமானது இவரது குடும்பம். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பில் டிப்ளமோ முடித்தார். அக்காலகட்டத்தில் மதுரையில் அவர் படித்த துறையில் வேளை வாய்ப்புகள் பிரகாசாமாக இல்லாததால் வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார். அதன் பின் சொந்தமாக பல தொழில்கள் செய்தார்.
தமிழின் முன்னணி இதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய 11 புத்தகங்கள் வெளியாகி உள்ளன. மொழியாக்கங்களும் செய்து வருகிறார். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல கருத்தரங்களில் தொடர்ந்து பங்கு கொள்கிறார். கடந்த ஆண்டு எட்டு நாடுகளின் வழியே 10000 கி.மி தரை வழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு சென்ற சர்வதேச குழுவில் இடம் பெற்றவர். இந்த ஆண்டும் ஜோர்தானில் நிகழ்ந்த பாலஸ்தீன நிலமீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டார்.
தொலைக்காட்சி ஊடகங்களில் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து தன் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
இதுவரை இவர் எழுதியுள்ள நூல்கள் – “ஒளிராத இந்தியா”. “நஞ்சாகும் நீதி”, “மலத்தில் தோய்ந்த மானுடம்”, “கூடங்குளம் – விழித்தெழும் உண்மைகள்’.
இதுவரை இவர் மொழிபெயர்த்த நூல்கள் – “அப்சலைத் தூக்கிலிடாதே”, “குஜராத் 2002 இனப்படுகொலை”, “அமைதிக்காகப் போராடுவோம்”, “தோழர்களுடன் ஒரு பயணம்”, “மதவெறி”, “குரலின் வலிமை”.
– அருண்.